பூமியில் ஒரே நாளில் இரண்டு முறை சூரியன் உதித்த நிகழ்வு பற்றித் தெரியுமா?

பூமியின் நாட்களை நிலவு நீளமாக்குகிறதா? இப்படியே போனால் என்ன நடக்கும்?

பட மூலாதாரம், Getty Images

  • எழுதியவர், ஆசிரியர் குழு
  • பதவி, பிபிசி முண்டோ

பல நூறு கோடி ஆண்டுகளுக்கு, பூமியில் ஒரு நாளின் சராசரி நீளம் 13 மணிநேரத்திற்கும் குறைவாக இருந்தது.

அப்போதிருந்து, அது படிப்படியாக விரிவடைந்து வருகிறது. நிலவு மற்றும் பெருங்கடல்கள் இருப்பதன் காரணத்தினால், அது மெதுவாக விரிவடைந்து வருகிறது.

மனித வரலாற்றில் நிலவு எப்பொழுதும் பூமியின் தவிர்க்க முடியாத பகுதியாக இருந்து வருகிறது.

கடல் அலைகள் நிலவின் மென்மையான ஈர்ப்பு விசையால் கட்டுப்படுத்தப்படுகின்றன. பல உயிரினங்களின் இரவு நேர வாழ்க்கை அதன் ஒளியால் தான் நடக்கிறது.

மனித நாகரிகங்கள் நிலவின் இயக்கங்களுக்கு ஏற்பத் தங்கள் நாட்காட்டிகளை அமைத்துக் கொண்டன. மேலும் சில சிறிய வண்டுகள் போன்ற உயிரினங்கள் நிலவின் மேற்பரப்பில் பிரதிபலிக்கும் சூரிய ஒளியால் வழிநடத்தப்படுகின்றன.

மிக முக்கியமாக, சில கோட்பாடுகளின்படி, நிலவு நமது கிரகத்தில் வாழ்க்கையைச் சாத்தியமாக்கும் சூழ்நிலைகளை ஏற்படுத்தி, பூமியில் உயிர்கள் உருவாவதற்கு வழிவகுத்திருக்கலாம் என்று கூறுகின்றன.

பூமியைச் சுற்றியுள்ள நிலவின் விசித்திரமான சுற்றுப்பாதை இன்று நம் வாழ்க்கையை வடிவமைக்கும் சில வானிலை அமைப்புகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
பூமியில் நாட்களின் நீளத்தை அதிகரிக்கும் நிலா!

பட மூலாதாரம், Getty Images

நிலவு பூமியை விட்டு விலகிச் செல்கிறதா?

எப்படி இருப்பினும், நிலவு நம்மை விட்டு மேலும் மேலும் விலகிச் செல்கிறது.

அது பூமியைச் சுற்றிச் சுழலும் போது, அதன் சுழற்சியும் இயக்கமும் ஒத்திசைவாக இருக்கிறது. அதனால்தான் நாம் நிலவின் ஒரு பக்கத்தை மட்டுமே பார்க்கிறோம். 'சந்திர மந்தநிலை' (lunar recession) என்று அழைக்கப்படும் ஒரு செயல்பாட்டில் நிலவு படிப்படியாக பூமியிலிருந்து விலகி நகர்கிறது.

அப்பல்லோ விண்வெளி வீரர்களால் நிலவின் மேற்பரப்பில் வைக்கப்பட்டுள்ள பிரதிபலிப்பான்களிலிருந்து (reflectors) லேசர்களின் மூலம், நிலவு எவ்வளவு விரைவாக நகர்கிறது என்பதை விஞ்ஞானிகள் சமீபத்தில் மில்லிமீட்டர் துல்லியத்துடன் அளவிட்டனர்.

ஒவ்வொரு ஆண்டும் நிலவு பூமியிலிருந்து 3.8செ.மீ வீதம் விலகிச் செல்வதை அவர்கள் உறுதிப்படுத்தினர். மேலும், இது நிகழும்போது, ​​​​நமது பூமியின் நாட்கள் சிறிது நீளமாகின்றன.

பூமிக்கும் அதன் துணைக்கோளான நிலவுக்கும் இடையிலான உறவைப் படிக்கும் லண்டன் பல்கலைக்கழகத்தின் புவி இயற்பியல் பேராசிரியரான டேவிட் வால்தம், 'இது அலைகளைப் பற்றியது' என்கிறார்.

"பூமியில் உள்ள அலை எதிர்ப்பு அதன் சுழற்சியைக் குறைக்கிறது. மேலும் நிலவு சுழல் உந்தத்தின் (angular momentum) வடிவத்தில் அந்த ஆற்றலைப் பெறுகிறது," என்று அவர் கூறுகிறார்.

பூமி சுழலும் போது நிலவின் ஈர்ப்பு விசையால் கடல்களில் அதிக மற்றும் தாழ்வான அலைகள் ஏற்படுகின்றன.

உண்மையில், இந்த அலைகள் நிலவின் ஈர்ப்பு விசையை நோக்கியும் அதற்கு அப்பாலும் நீள்வட்ட வடிவில் (elliptical shape) நீண்டு சென்று அலைகள் உருவாகிறது.

பூமியில் நாட்களின் நீளத்தை அதிகரிக்கும் நிலா!

பட மூலாதாரம், Getty Images

நாட்கள் எவ்வளவு நீளமாகியிருக்கின்றன?

இருப்பினும், பூமி அதன் அச்சில் நிலவை விட மிக வேகமாகச் சுழல்வதால், கீழே நகரும் கடல் படுகைகளால் ஏற்படும் உராய்வினால் நீர் இழுக்கப்படுகிறது. இதன் பொருள் - நீர், நிலவை அதன் சுற்றுப்பாதையில் சற்று முன்னோக்கி நகர்த்துகிறது, நிலவு அதை பின்னுக்குத் தள்ள முயற்சிக்கிறது.

இதனால் பூமியின் சுழற்சி ஆற்றல் படிப்படியாகக் குறைந்து, பூமியின் சுழற்சியைக் குறைக்கிறது. அதே நேரத்தில் நிலவின் சுற்றுப்பாதை உயரம் அதன் அதிகரித்த ஆற்றல் காரணமாக அதிகரிக்கிறது.

மிகச் சமீபத்திய தரவுகளின் அடிப்படையில், பூமியின் சுழற்சியின் இந்த படிப்படியான மந்தநிலையானது 17-ஆம் நூற்றாண்டின் இறுதியில் இருந்து, ஒரு நாளின் நீளத்தை, ஒரு நூற்றாண்டுக்குச் சராசரியாக 1.09 மில்லி விநாடிகள் அதிகரிப்புக்கு ஒத்திருக்கிறது. அதாவது, இது, ஒரு நூற்றாண்டிற்கு சுமார் 1.09 மில்லி விநாடிகள் சராசரி ஒரு நாளின் நீளத்தில் அதிகரிப்பைக் குறிக்கிறது.

இது மிகச்சிறிய மாற்றம், எனவே முக்கியமற்றது எனத் தோன்றினாலும், பூமியின் வரலாற்றின் 450 கோடி ஆண்டுகளை மொத்தமாகப் பார்க்கும் போது இது ஒரு முக்கியமான மாற்றத்தைக் குறிக்கிறது.

நிலவு விலகும் வேகம் மாறுகிறதா?

சூரியக் குடும்பம் தோன்றிய முதல் 5 கோடி ஆண்டுகளில் நிலவு உருவானதாகக் கருதப்படுகிறது.

மிகவும் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டக் கோட்பாடு என்னவென்றால், தியா எனும் கோள் பூமியுடன் மோதியபோது துகள்கள் உருவாயின. அதிலொன்று நிலவு என்று அறியப்பட்டது. இந்த நிகழ்வின் போது பூமி அதன் கரு நிலையில் இருந்தது.

புவியியல் தகவல்களின்படி, நிலவு இப்போது இருப்பதை விட முன்னர் பூமிக்கு மிக நெருக்கமாக இருந்தது என்பதை வெளிப்படுத்துகிறது.

நிலவு தற்போது பூமியிலிருந்து 3,84,400 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது .

சுமார் 320 கோடி ஆண்டுகளுக்கு முன்பு (டெக்டோனிக் தகடுகள் நகரத் தொடங்கி, பெருங்கடல்களில் வாழ்ந்த நுண்ணுயிரிகள் நைட்ரஜனை விழுங்கிக் கொண்டிருந்தபோது) அது 2,70,000 கிலோமீட்டர் தொலைவில் இருந்தது என்று ஒரு சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது.

ஜெர்மனியின் ஜெனாவில் உள்ள ஃபிரெட்ரிக் ஷில்லர் பல்கலைக்கழகத்தின் புவி இயற்பியலாளர் டாம் யூலன்ஃபெல்ட் இந்த ஆய்வுக்குத் தலைமை தாங்குகிறார். அவர் கூறுகையில், "வேகமாகச் சுழலும் பூமி, ஒரு குறுகிய நாளைக் கொண்டிருந்தது, எனவே 24 மணி நேரத்தில் இரண்டு சூரிய உதயங்களும் இரண்டு சூரிய அஸ்தமனங்களும் இருந்தன," என்று கூறுகிறார்.

மேலும் "இது பகல் மற்றும் இரவுக்கு இடையே வெப்பநிலை வேறுபாட்டைக் குறைத்து ஒளிச்சேர்க்கை செய்யும் உயிரினங்களின் உயிர் வேதியியலை பாதித்திருக்கலாம்," என்று அவர் மேலும் கூறுகிறார்.

ஆயினும்கூட, நிலவு இடைவெளியின் வேகம் காலப்போக்கில் மாறுபடுகிறது, அதிகமாகிறது, சில சமயம் குறைகிறது, என்பதையும் சில ஆராய்ச்சிகள் காட்டுவதாகக் கூறப்படுகிறது.

அர்ஜென்டினாவில் உள்ள நேஷனல் யுனிவர்சிட்டி ஆஃப் சால்டாவைச் சேர்ந்த புவியியலாளர் வனினா லோபஸ் டி அசரேவிச் நடத்திய ஆய்வின்படி, சந்திரன் 55 கோடி ஆண்டுகள் முதல் 62.5 ஆண்டுகளுக்கு முன்பு ஆண்டுதோறும் 2.8 அங்குலங்கள் (7 செ.மீ.) பூமியிலிருந்து நகர்ந்திருக்கலாம்.

"பூமியிலிருந்து நிலவு விலகிச் செல்லும் வேகம் நிச்சயமாக காலப்போக்கில் மாறியுள்ளது. எதிர்காலத்திலும் மாற்றங்கள் நடக்கும்," என்று யூலன்ஃபெல்ட் கூறுகிறார்.

ஆனால் நிலவு இப்போது இருப்பதை விட கடந்த காலத்தில் மிகவும் மெதுவாகப் பின்வாங்கியுள்ளது.

உண்மையில், நிலவின் மந்தநிலையின் (receded) விகிதம் வழக்கத்திற்கு மாறாக அதிகமாக இருக்கும் காலகட்டத்தில் நாம் தற்போது வாழ்கிறோம். நிலவு இன்று இருக்கும் நிலையை அடைய 150 கோடி ஆண்டுகளுக்கு தற்போதைய விகிதத்தில் மட்டுமே நகர்ந்திருக்க வேண்டும் .

ஆனால் 450 கோடி ஆண்டுகளுக்கு முன்பு நிலவு உருவானதிலிருந்து இந்தச் செயல்முறை நடந்து வருகிறது. இது கடந்த காலங்களில் அது மெதுவாக இருந்தது என்பதைக் குறிக்கிறது.

பூமியில் நாட்களின் நீளத்தை அதிகரிக்கும் நிலா!

பட மூலாதாரம், Getty Images

அலைகள்

"இப்போது அலை எதிர்ப்பு பண்பு நாம் எதிர்பார்ப்பதை விட மூன்று மடங்கு அதிகமாக உள்ளது," என்று வால்தம் விளக்குகிறார்.

இதற்கு அட்லாண்டிக் பெருங்கடல் தான் காரணம்.

கண்டங்களின் தற்போதைய கட்டமைப்பின் படி, வடக்கு அட்லாண்டிக் படுகையானது அதிர்வு விளைவை உருவாக்கும் துல்லியமான விகிதங்களைக் கொண்டுள்ளது. எனவே அதில் உள்ள நீரில் உருவாகும் அலைகளின் விகிதம் முன்னும் பின்னுமாக நகரும்.

அலைகள் அதிகமாக இருப்பதை இது பிரதிபலிக்கிறது. வால்தம் கூறுகையில், "ஒரு குழந்தையை ஊஞ்சலில் ஆட்டுவதை பற்றிச் சிந்தியுங்கள். ஒவ்வொரு உந்துதலையும் ஏற்கனவே இருக்கும் இயக்கத்துடன் ஒத்திசைத்தால் அவர் மேலும் உயரத்திற்கு செல்கிறார்,” என்கிறார்.

"வட அட்லாண்டிக் சற்று அகலமாகவோ அல்லது குறுகலாகவோ இருந்தால், இது சாத்தியமாகது," என்று வால்தம் கூறுகிறார். "பல லட்சம் ஆண்டுகள் பின்னோக்கிச் சென்றால், கண்டங்கள் வெவ்வேறு நிலைகளில் இருந்ததால், அலை விசை குறைவாக இருந்தது என்பதை மாதிரிகள் காட்டுகின்றன," என்கிறார்.

இருப்பினும், இது எதிர்காலத்தில் மாறிக் கொண்டே தான் இருக்கும். ஆய்வு மாதிரிகளின் படி, ஒரு புதிய அலை அதிர்வு 15 கோடி ஆண்டுகளில் தோன்றும், பின்னர் 100 கோடி ஆண்டுகளில் ஒரு புதிய 'சூப்பர் கண்டம்' (supercontinent) தோன்றுபோது அந்த அலை அதிர்வு மறைந்துவிடும்.

எதிர்காலத்தில் என்ன நடக்கும்?

எதிர்காலத்தில் பூமி தனது நிலவை இழக்கும் சாத்தியங்கள் உள்ளனவா?

தற்போது வேகமாக நிகழ்ந்து வரும் நிலவின் நகர்ந்து செல்லும் விகிதத்தில் கூட, நிலவு பூமியிலிருந்து முற்றிலும் பிரிந்து செல்வது சாத்தியமில்லை.

ஏறக்குறைய 500 கோடி முதல் 1,000 கோடி ஆண்டுகளில், சூரியன் பெரும்பாலும் அழிந்துவிடும், மேலும் மனித இனம் அதற்கு முன்பே அழிந்திருக்கும்.

மறுபுறம், காலநிலை மாற்றத்தால் ஏற்படும் உருகுதல் காரணமாக, பனிப்பாறைகளில் இருக்கும் தண்ணீர் இருப்பு அழிவதால் மனித இனத்தின் எதிர்கால நாட்கள் குறையலாம்.

சுமார் 60,000-90,000 கோடி ஆண்டுகளுக்கு முன்பு, பூமி குளிர்ச்சியான கட்டத்தில் நுழைந்ததாகக் கூறப்படும்போது, ​​அலைகளில் விகிதத்தில் பெரும் அளவு குறைந்ததாக வால்தம் குறிப்பிடுகிறார்.

இருப்பினும், பாதிப்பைக் கணிப்பது கடினம், ஏனெனில் பனிக்கட்டிகளின் எடை அகற்றப்படும்போது நிலப்பரப்புகள் மீண்டும் அதே நிலைக்கு திரும்பி ஈடுசெய்யப்படும்.

பூமியைச் சுற்றியுள்ள நிலவின் நீள்வட்டப் பாதை இதைப் பெரிய அளவில் தீர்மானிக்கும் என்றாலும், தூரம் ஒவ்வொரு 29 நாட்களுக்கும் 43,000 கி.மீ. மாறுபடும். கோட்பாட்டளவில், நாசாவின் ஆர்ட்டெமிஸ் திட்டத்துடன் நிலவுக்குப் பறக்கும் அடுத்த தலைமுறை விண்வெளி வீரர்கள் தாங்கள் பார்த்ததைச் சொல்ல முடியும். 60 ஆண்டுகளுக்கு முன்பு அவர்களின் அப்போலோ திட்டத்தின் முன்னோடிகளை விட பூமி வெகு தொலைவில் உள்ளது என்பதை அவர்கள் சொல்லக்கூடும்.

நம்மைப் பொறுத்தவரை, ஒரு நொடியை 100 கோடிப் பகுதிகளாகப் பிரித்து, அதில் ஒரு பகுதி ஒரு நாளில் சேர்க்கப்பட்டால், அதனால் ஏற்படும் நீண்டகால மாற்றத்தைக் கவனிக்கும் அளவு நமது வாழ்நாள் நீளமானதல்ல.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)