அரசமைப்புச் சட்டத்தை மாற்ற பாஜக திட்டமா? அம்பேத்கர், ஆர்.எஸ்.எஸ் இருவரின் இலக்கும் ஒன்றா?

அம்பேத்கர் - மோதி

பட மூலாதாரம், Getty Images

  • எழுதியவர், நாம்தேவ் காத்கர்
  • பதவி, பிபிசி மராத்தி செய்தியாளர்

2024 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கு ஐந்து நாட்களுக்கு முன் பிரதமர் நரேந்திர மோதி பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கையை புதுதில்லியில் ஏப்ரல் 14ஆம் தேதி வெளியிட்டார்.

இதுமட்டுமின்றி அம்பேத்கர் ஜெயந்தி அன்று நாக்பூரில் உள்ள தீக்ஷா பூமிக்கும் பிரதமர் செல்ல திட்டமிடப்பட்டது. பின்னர் கடைசி நேரத்தில் அது ரத்து செய்யப்பட்டது.

பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கையையும், அம்பேத்கர் ஜெயந்தியன்று பிரதமர் நரேந்திர மோதியின் உரையையும் அரசியல் கண்ணோட்டத்தில் பார்ப்பது முக்கியமாகிறது.

ஏனென்றால் பிரதமருக்கு 400 எம்பிகளின் ஆதரவு கிடைத்தால் அம்பேத்கர் உருவாக்கிய அரசியலமைப்பை மாற்றிவிடுவார் என்ற எதிர்க்கட்சிகளின் மிகப்பெரிய குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் இது முக்கியமானது.

இருப்பினும் இந்த குற்றச்சாட்டுகளை பாரதிய ஜனதா கட்சியும், நரேந்திர மோதியின் அரசும் பல முறை நிராகரித்துள்ளது.

"அரசியலமைப்புதான் எங்களுக்கு கீதை, பைபிள், குரான் எல்லாமே. அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது. பாபா சாகேப் வந்தாலும் அரசியல் சட்டத்தை இப்போது மாற்ற முடியாது" என்று மோதி கூறியுள்ளார்.

அரசியலமைப்புச் சட்டத்தின் மீது தனக்குள்ள அசைக்க முடியாத நம்பிக்கையைக் காட்ட பிரதமர் மோதி, டாக்டர் அம்பேத்கரின் பெயரை குறிப்பிட்டார்.

பாஜக அரசில் ஒருமுறை அமைச்சராக இருந்த அருண் ஷோரி, பாபா சாகேப்பை விமர்சித்து, 'ஒர்ஷிப்பிங் ஃபால்ஸ் காட்ஸ்' என்ற புத்தகத்தை எழுதியிருந்தார். அப்போது அவர் மீது கட்சி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது வரலாறு.

இன்று அதே கட்சியின் தலைவர்கள் பாபா சாகேப் பெயரை குறிப்பிடுவதை பார்க்க முடிகிறது. இந்த வேறுபாட்டை கடந்த சில ஆண்டுகால அரசியலில் பார்க்க முடிகிறது.

பாரதிய ஜனதா கட்சியில் சேர்வதற்கு முன்பு, நரேந்திர மோதி நீண்ட காலமாக பாரதிய ஜனதா கட்சி தனது தாய் அமைப்பாக கருதும் ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்துடன் தொடர்பில் இருந்தார்.

மோதியின் சித்தாந்தத்தையும் டாக்டர் அம்பேத்கரின் சித்தாந்தத்தையும் ஒன்றாக வைக்க முடியாது என்று அரசியல் மற்றும் சமூக அறிஞர்கள் கூறுகின்றனர்.

ஆனால், கடந்த சில ஆண்டுகளாக, அம்பேத்கரின் சிந்தனைகளுக்கு 'இடமளிக்க' ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கம் கடுமையாக உழைத்து வருகிறது. அதன் தற்போதைய தலைவர் மோகன் பாகவத் அடிக்கடி அம்பேத்கரைப் புகழ்ந்து பேசி வருகிறார். சங்கத்தின் கருத்துகள் அம்பேத்கரின் கருத்துகளைப் போலவே இருப்பதாகவும் அவர் கூறினார்.

அம்பேத்கருடன் பாஜக

பட மூலாதாரம், Getty Images

அம்பேத்கரின் சமத்துவமும் ஆர்.எஸ்.எஸ். கூறும் நல்லிணக்கமும் ஒன்றா?

ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கம் மற்றும் டாக்டர் அம்பேத்கரின் கருத்துகள் ஒத்ததா இல்லையா என்ற விவாதம் வரும்போதெல்லாம், முதலில் நினைவுக்கு வரும் வார்த்தைகள் 'சமத்துவம்' மற்றும் 'நல்லிணக்கம்'.

இந்த இரண்டு கருத்துகளின் அர்த்தத்தில் ஒரு நுட்பமான வேறுபாடு உள்ளது. சமத்துவம் என்றால் ஆங்கிலத்தில் ஈக்வாலிட்டி. நல்லிணக்கம் என்றால் ஹார்மனி. இந்த நுட்பமான வேறுபாடு அம்பேத்கர் மற்றும் சங்கத்தின் பார்வைகளிலும் தெரிகிறது.

"பாபா சாகேப் எப்போதும் சமத்துவத்தை வலியுறுத்துகிறார். ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கம் நல்லிணக்கத்தை வலியுறுத்துகிறது. சங்கம் நல்லிணக்கத்தை ஆதிக்க நோக்கத்திற்காக பயன்படுத்துகிறது. அதே சமயம் பாபா சாஹேப் சமத்துவக் கருத்தை சுதந்திரத்திற்காக பயன்படுத்துகிறார்,” என்று சமூக விவகாரங்களில் நிபுணரான பிரதிமா பிரதேசி கூறுகிறார்,

"இந்த இரண்டு கருத்துகளுக்கும் இடையிலான வேறுபாடு 'இணக்கமான நல்லிணக்கமாகும்'. உங்களுக்கும் எங்களுக்கும் இடையிலான வேறுபாடு நிலைத்திருக்க வேண்டும் என்று சங்கம் விரும்புகிறது.

சக்தி வாய்ந்தவர்கள் இருக்கும் இடத்தில் அவர்களுடன் இணையுங்கள். உங்கள் வேரை அழித்துவிடுங்கள். மறுபுறம் டாக்டர் அம்பேத்கரின் சமத்துவத்தில், நீங்கள் வாழ்க்கையில் மரியாதையுடன் சம உரிமைகளை எதிர்பார்க்கிறீர்கள்," என்று பிரதிமா பிரதேசி கூறுகிறார்.

ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் மீது அனுதாபம் கொண்ட அறிவுஜீவிகள், 'நல்லிணக்கம்' என்ற கருத்தின் அர்த்தத்தை தங்கள் சொந்த வழிகளில் விளக்குவதைக் காணலாம்.

அகில இந்திய நல்லிணக்க இயக்கத்தின் தேசியக் குழு உறுப்பினர், பேராசிரியர். டாக்டர் ரமேஷ் பாண்டேவிடம் பிபிசி மராத்தி இதுகுறித்து பேசியது.

பாபா சாகேப்பின் 'சமத்துவ' இலக்கு மற்றும் ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் 'நல்லிணக்க' இலக்கும் ஒன்றுதான் என்று அவர் குறிப்பிட்டார்.

"சம்தா அனு சமர்சேடூன்...' என்பது சங்கத்தின் முழக்கம். அதை அடிப்படையாகக் கொண்ட பாடல்களும் உள்ளன. நாங்களும் சமத்துவத்தை நிலைநாட்ட விரும்புகிறோம், ஆனால் நல்லிணக்கத்தின் மூலம். அதைப் புரிந்து கொள்ளுங்கள். 'சமத்துவம்' தான் எங்களுக்கு இலக்கு. அதேசமயம் நல்லிணக்கமே அங்கு செல்வதற்கான வழி," என்று அவர் சொன்னார்.

"நல்லிணக்கமின்றி சமூக சமத்துவம் உணரப்படாது என்று ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கமும் உணர்கிறது. நல்லிணக்கம் இல்லாமல் சமூக சமத்துவம் சாத்தியமற்றது. இது எங்களின் இரண்டாவது அறிவிப்பு," என்று பேராசிரியர் பாண்டவ் கூறுகிறார்.

"சங்கத்தின் படி, நல்லிணக்கம் என்பது பட்டியல் சாதிகள் மற்றும் பழங்குடியினர் என்று அழைக்கப்படுபவர்களை நேசித்து, அவர்களின் மகிழ்ச்சி மற்றும் துக்கங்களைப் புரிந்துகொண்டு, அவர்களின் இட ஒதுக்கீட்டைப் பேணுவதன் மூலம், அவர்களின் வாழ்க்கையுடன் இணக்கமாக வாழ்வதன் மூலம் ஒட்டுமொத்த சமூகத்தையும் சுரண்டலிலிருந்து விடுபடச் செய்வதாகும்," என்று நல்லிணக்கத்தின் வரையறையை விளக்கிய பேராசிரியர் பாண்டவ் குறிப்பிட்டார்.

அம்பேத்கர் உன்னதமானவராகக் கருதிய புத்தருக்கும் இதே எண்ணம் இருந்ததாக அவர் கூறினார். "உங்கள் துக்கம் என் துக்கத்தில் உள்ளது, உங்கள் மகிழ்ச்சி என் மகிழ்ச்சியில் உள்ளது என்று கௌதம புத்தர் கூறுகிறார். சங்கத்தின் நல்லிணக்கமும் இதைப் பற்றி பேசுகிறது," என்றார் அவர்.

சிந்தனையாளர் டாக்டர் ராவ்சாகேப் கஸ்பே அவர்களிடமும் பிபிசி மராத்தி இது குறித்துப்பேசியது.

டாக்டர் ராவ்சாகேப் கஸ்பே, ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் தத்தோபந்த் தெங்கடியின் பெயரைக் குறிப்பிட்டு, “1985ஆம் ஆண்டு சமாஜிக் சமரசதா மஞ்சை இவர் நிறுவினார். அன்றிலிருந்து சங்க உலகில் நல்லிணக்கமும் அதன் கருத்தும் வலுப்பெற்றன,” என்று கூறினார்.

"சமூக, அரசியல் மற்றும் பொருளாதார சமத்துவமே நல்லிணக்கத்தைப் பேணுவதற்கான முதல் நிபந்தனை" என்று கஸ்பே குறிப்பிட்டார்.

'பாபா சாகேப்பும் சங்கமும் ஒரே குறிக்கோளுடன் இல்லை'

அம்பேத்கருடன் பாஜக

பட மூலாதாரம், Getty Images

சமத்துவம் மற்றும் நல்லிணக்கம் என்ற இரண்டு கருத்துகளுக்கு இடையே வேறுபாடு உள்ளது. எனவே டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர் மற்றும் ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் சங்கத்தின் பாத்திரங்கள் வேறுபட்டவை என்று வரலாற்று ஆய்வாளரும் சிந்தனையாளருமான டாக்டர் உமேஷ் பாக்டே குறிப்பிடுகிறார்.

டாக்டர் பாக்டே, பாபா சாகேப் அம்பேத்கர் மராத்வாடா பல்கலைக்கழகத்தின் வரலாறு மற்றும் பண்டைய இந்திய கலாச்சாரத் துறையின் தலைவராக இருந்துள்ளார். பாபா சாகேபின் சமத்துவக் கருத்தை இன்னும் ஆழமாக விளக்க முயன்றார்.

"பாபா சாகேப் பிறப்பால் ஏற்றத்தாழ்வு (சாதி, மதம் போன்றவை), பரம்பரை சமத்துவமின்மை (செல்வம், அறிவு போன்றவை) மற்றும் சாதனையால் ஏற்றத்தாழ்வு என்று மூன்று நிலைகளில் சமத்துவமின்மையைக் கண்டார். சாதனையால் உள்ள ஏற்றத்தாழ்வை அகற்றுவதற்கு பதிலாக முதல் இரண்டு ஏற்றத்தாழ்வுகள் அதாவது பிறப்பு மற்றும் பரம்பரை ஏற்றத்தாழ்வுகள் அகற்றப்பட வேண்டும் என்று அவர் கருதினார்,” என்றார் அவர்.

ஆனால் ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் தலைவராக இருந்த மாதவ் சதாசிவ் கோல்வால்கர், முதல் இரண்டு ஏற்றத்தாழ்வுகளை 'இயற்கையானவை' என்று அழைத்தார்.

அம்பேத்கருடன் பாஜக

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, பாபா சாகேப் அம்பேத்கர் சிலைக்கு பிரதமர் நரேந்திர மோதி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்து மதத்தின் மீதான பாபா சாகேபின் கோபம்

பல அறிஞர்களின் கூற்றுப்படி ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கம் மற்றும் பாபா சாகேப் அம்பேத்கரின் கருத்துகளுக்கு இடையே முரண்பாடு உள்ளது. இந்து மதத்தை விட்டு வெளியேறி பௌத்த மதத்தைத் தழுவிய பாபா சாகேப்பின் முடிவு குறித்து சங்கத்துடன் தொடர்புடைய அறிவுஜீவிகள் வேறுபட்ட கருத்துகளைக் கொண்டுள்ளனர்.

1935 அக்டோபர் 13 ஆம் தேதி நாசிக்கில் உள்ள யவ்லாவில் டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர், "நான் இந்துவாக பிறந்தேன். ஆனால் இந்துவாக இறக்க மாட்டேன்" என்று கூறியிருந்தார்.

இதற்கு முன் பாபா சாகேப் இரண்டு பெரிய போராட்டங்களை நடத்தினார். முதலாவது 1927 ஆம் ஆண்டு மஹாத் சத்தியாகிரக இயக்கம் மற்றும் இரண்டாவது 1930 இல் நாசிக்கில் உள்ள காலாராம் கோவிலுக்குள் நுழைவதற்கான இயக்கம்.

யவ்லாவில் இந்து மதம் தொடர்பான அவரது அறிக்கை, இந்த இரண்டு பெரிய மற்றும் புரட்சிகர இயக்கங்களுக்குப் பிறகு வெளியானது. இது பல வழிகளில் முக்கியமானது.

இதைப் புரிந்துகொள்வதற்கு முன், யவ்லாவில் பாபாசாகேபின் அறிக்கை மற்றும் மஹாத் மற்றும் காலாராம் கோயில் நுழைவு இயக்கம் குறித்து ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கம் என்ன சொல்கிறது என்பதைப் பார்க்க வேண்டும்.

ஏனென்றால் ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் குறிக்கோள் 'இந்து அமைப்பு'. அத்தகைய சூழ்நிலையில், டாக்டர் அம்பேத்கர் யவ்லாவில் கூறியது இதற்கு முரணாக இருக்கிறது.

"ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கம், 'இந்து அமைப்பு' என்ற ஆயுதத்தைத் தேர்ந்தெடுத்து, 'உயர்வை’ இலக்காக முன்வைத்தது," என்று டாக்டர் ரமேஷ் பாண்டவ் கூறுகிறார். அதேசமயம் மஹாத் சத்தியாகிரக இயக்கத்தில் பாபா சாகேப் இந்துக்களுக்காக இந்தக் கூட்டம் அழைக்கப்பட்டதாகக் கூறுகிறார்.

"டாக்டர் கேசவ் பலிராம் ஹெட்கேவார் சங்கத்தை 1925 இல் நிறுவினார். அமைப்பின் பெயரை முடிவு செய்ய 1927 வரை கால அவகாசம் எடுத்தது. ஹெட்கேவார் இந்து சமுதாயத்தை சீர்திருத்தத் தொடங்கினார். அதே நேரத்தில் பாபா சாகேப் இந்து அமைப்பு குறித்து ஒரு அறிக்கை வெளியிட்டார். இது வெறும் தற்செயல் நிகழ்வு அல்ல,” என்று அவர் மேலும் கூறினார்.

“பாபா சாகேப் 1935 வரை மஹாத் ஏரியின் தண்ணீருக்காக சத்தியாகிரகம் செய்தார். மேலும் காலாராம் கோயிலுக்காக சத்தியாக்கிரகமும் செய்தார். இதன் மூலம் இந்து மதத்தின் மீது தனது அதிகாரத்தை நிலைநாட்டினார். இதையெல்லாம் செய்த பிறகும் இந்து சமுதாயத் தலைவர்கள் தனது வேலையைப் புரிந்து கொள்ளவில்லை என்பதை 1935 வாக்கில் பாபா சாகேப் உணர்ந்தார். எனவே இந்துவாகப் பிறந்தாலும் இந்துவாக இறக்க மாட்டேன் என்று அறிவித்தார்.”

டாக்டர் அம்பேத்கர் ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் மீது ஒருபோதும் பாசம் காட்டவில்லை. இதைப் பற்றிய எந்தக் குறிப்பும் காணப்படவில்லை என்று டாக்டர் ராவ்சாகேப் கஸ்பே தெரிவித்தார்.

ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் தலைமையகம் நாக்பூரில் இருந்தது, அங்கு பாபா சாகேப் 'தம் தீக்ஷா' திட்டத்தை நடத்தி லட்சக்கணக்கான தனது ஆதரவாளர்களை மதம் மாற்றினார்.

அம்பேத்கருடன் பாஜக

பட மூலாதாரம், Getty Images

'பாபா சாகேப்பின் இறுதி இலக்கு மத மாற்றம் அல்ல, மாறாக சாதி ஒழிப்பு.'

டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர் 1935 இல் இந்து மதத்தை விட்டு வெளியேறுவதாக அறிவித்தார். 1956 இல் புத்த மதத்திற்கு மாறினார்.

"பாபா சாகேப் 'ஏமாற்றத்தால்' இந்து மதத்தை விட்டு வெளியேறி புத்த மதத்தை ஏற்றுக்கொண்டபோது, ​​அதற்குப் பின்னால் ஒரு உறுதியான காரணம் இருந்தது. ஒரு திட்டம் இருந்தது,” என்று டாக்டர் பாண்டவ் குறிப்பிட்டார்.

பாபா சாஹேப் இந்து மதத்தை இரண்டு வழிகளில் பகுப்பாய்வு செய்ய விரும்பினார் என்று டாக்டர் உமேஷ் பாக்டே கூறுகிறார். ஒன்று பயன் மற்றும் நீதி. நீதியில் அவர் சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்தின் மதிப்புகளை எதிர்பார்த்தார்.

பாபா சாகேப்பின் மத மாற்றத்திற்கு முன் அவரது செயல்கள், அனுபவங்கள் மற்றும் பேச்சுகளைப் பார்த்தால், இந்து மதத்தால் அவரது பயன் மற்றும் நீதி ஆகிய இரண்டு அளவுகோல்களுக்குள்ளும் வரமுடியவில்லை. அதனால்தான் 'ரிடில்ஸ் இன் இந்துயிஸம்' என்ற நூலில் இந்து மதத்தின் சமூகக் கட்டமைப்பை விமர்சித்து அவர் எழுதியுள்ளார்.

"பாபாசாகேப் அம்பேத்கரின் எல்லா சமூக இயக்கங்களின் இறுதி நோக்கமும் மதமாற்றம் அல்ல. சாதி ஒழிப்பு தான். இது இந்து மதத்தில் சாத்தியமில்லை. எனவே அவர் மற்ற மதங்களை ஆராயத் தொடங்கினார். இதை நாம் உறுதியாகச் சொல்லலாம். ஏனெனில் அவர் இந்து மதத்தைத் தவிர மற்ற மதங்களை ஆராயத் தொடங்கியபோது சீக்கிய மதத்தைப் படிக்க முதலில் ஒரு குழுவை அனுப்பினார்,” என்று டாக்டர் பாக்டே கூறுகிறார்,

"பஞ்சாபில் மங்குராம் என்ற பாபா சாகேப்பின் நண்பர் ஒருவர் இருந்தார். அங்கு அவர் சீக்கியர்களிடமும் சாதி வெறி அதிகமாக இருப்பதைக் கண்டுபிடித்தார். அதனால் அவர் அந்த மதத்தையும் நிராகரித்தார். இவ்வாறு ஆராய்ந்து, ​​அவர் இறுதியாக பௌத்தத்தைத் தேர்ந்தெடுத்தார். இந்து மதத்தில் சாதி தான் அவரது முக்கிய ஆட்சேபமாக இருந்தது. அவரது இறுதி இலக்கு சாதியை ஒழிப்பதாகும். அதை இந்து மதத்தில் அடைய முடியாது."

ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்கத்தின் ஒட்டுமொத்த அமைப்பில் பாபா சாகேப்பிற்கு இந்து மதத்தின் மீது வெறுப்பு இல்லை என்று கூறப்பட்டாலும், டாக்டர் ராவ்சாகேப் கஸ்பே மற்றும் டாக்டர் உமேஷ் பாக்டே போன்ற மூத்த அறிஞர்களின் கூற்றுப்படி, அவர் அதிருப்தி காரணமாகவே மதத்தை விட்டு வெளியேறினார்.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால் ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் சித்தாந்தத்திற்கும் டாக்டர் அம்பேத்கருக்கும் இடையே ஒரு அடிப்படை வேறுபாடு இருந்தது. இருவரின் இறுதி இலக்கும் வெவ்வேறானவை.

அம்பேத்கருடன் பாஜக

பட மூலாதாரம், VIJAY SURWADE

படக்குறிப்பு, நாக்பூரில் பாபா சாகேப் புத்த மதத்தில் தீட்சை பெறுகிறார்.

பாபா சாகேப் ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சியில் பங்கேற்றாரா?

டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர் ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் கிளை ஒன்றுக்கு வருகை தந்ததாக சங்கத் தொண்டர்களால் எப்போதுமே கூறப்படுகிறது.

பிபிசி மராத்தியுடன் பேசும் போது, ​​ரமேஷ் பாண்டவும் இந்தக் கூற்றைக் குறிப்பிட்டார். "1939 மே 12 ஆம் தேதி புணேயில் உள்ள ஒரு முகாமில் சங்கக்கல்வி வகுப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. பாபா சாகேப் அங்குள்ள கோடைகாலப் பயிற்சி வகுப்பை பார்வையிட்டார். முன்னாள் எம்.பி. பாலாசாகேப் சாலுங்கேவின் 'ஆம்ச் சாப்' புத்தகம் இதை குறிப்பிடுகிறது," என்றார் அவர்.

இந்தப் புத்தகத்தில், பக்கம் எண் 25 இல், 'டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கரும், டாக்டர் ஹெட்கேவாரும் புனேயில் சந்தித்துப் பேசினர். இந்த உரையாடல் பௌசாகேப் கட்கரியின் பங்களாவில் நடந்தது. பௌசாகேப் அப்யங்கர், ஸ்ரீ. பாலாசாஹேப் சாலுங்கேவுடன், பாவே பள்ளி தன்னார்வலர்களை கோடைகால முகாமுக்கு அழைத்துச் சென்றார். ராணுவ ஒழுக்கம் மற்றும் அமைப்பு குறித்து பாபா சாகேப் உரை நிகழ்த்தினார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இருப்பினும், அதைப் பற்றிய கூடுதல் விவரங்கள் இந்த புத்தகத்திலோ அல்லது வேறு இடத்திலோ காணப்படவில்லை.

இந்த விவகாரம் குறித்துப் பேசிய டாக்டர் ராவ்சாகேப் கஸ்பே, "பாபா சாகேப் அம்பேத்கரின் முழு எழுத்துகளையும் படித்துள்ளேன். பாபா சாகேப் அம்பேத்கர் சங்கக் கிளைக்கு சென்றதாக அவரது எந்த புத்தகத்திலும் குறிப்பிடப்படவில்லை. இந்த பிரசாரம் முற்றிலும் பொய்யானது" என்றார்.

“காந்திஜி ஒருமுறை வந்திருந்தது உண்மைதான். ஆனால் டாக்டர் அம்பேத்கர் சங்கத்தின் கிளைக்கு வரவே இல்லை." என்று கஸ்பே மேலும் குறிப்பிட்டார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)